விழுப்புரம், ஜூன் 26: விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2 ஹெக்டேர் விளைநிலம் வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதனை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே உயர்பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயனடையும் வகையில் திட்டம் திருத்தியமடைக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான அனைத்து விவசாயிகளும் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் கொடுத்து பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.