சீர்காழி, ஜூன் 25: சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் புதிய, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி, கொள்ளிட முக்கூட்டு, கடைவீதி, உழவர் சந்தை, வாரச் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் குவிகின்றன. நகர பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை தூய்மைப்படுத்தி சேகரிக்க நகராட்சி துப்புரவு பணியாளர்கள், தனியார் துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு குப்பைகளை சேகரித்து, நகராட்சிக்கு சொந்தமான ஈசான்ய தெருவில் உள்ள உரக் கிடங்குகளில் கொட்டப்படுகின்றன.இதனிடையே, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், சீர்காழி நகராட்சி குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தெருக்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் இருக்கவும், வீடுகள், கடைகளில் சேரும் குப்பைகளைத் தினந்தோறும் காலை வேளையில் வீடு தேடி வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.