கமுதி, ஜூன் 19: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தினர் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கமுதி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு வழங்கப்படும் குடிநீரை சிலர் மின் மோட்டார் வைத்து குடிநீரை அதிகமாக திருடி தங்களது வீடுகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் குடிநீர் அனைவருக்கும் கிடைக்காமல் போய் விடுகிறது. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் நிறுத்தப்பட்டதாலும் ஏராளமானோர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பசும்பொன் கிராம மக்கள் காலி குடங்களுடன் அங்கிருந்து நடந்தே வந்து கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரமேஷ்குமார் பொதுமக்களை சமரசம் செய்து அனைவக்கும் குடிநீர் கிடைக்கச் செய்யப்படும் என்று உறுதியளித்தவுடன் கலைந்து சென்றனர். மேலும் ரமேஷ்குமார் கூறியதாவது:-பசும்பொன் கிராமத்திற்கு உடனடியாக சென்று குடிநீர் கிடைக்காத பகுதிகளை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் மின் மோட்டார்கள் பயன்படுத்தாமல் தடுத்து நிறுத்தப்பட்டு அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது உதவி திட்ட அலுவலர் கண்ணன் உடன் இருந்தார்.