நாகை, ஜூன்19: கஜா புயலின் போது சேதமடைந்த நாகை உழவர் சந்தையை சீர் செய்யாமல் வேளாண் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதியான நாகை மாவட்டம் நெல் விவசாயத்திற்கு அடுத்தபடியாக தென்னை, மா மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், நாலுவேதபதி, புஷ்பவனம், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களை சிறப்பு பஸ்கள் மூலம் நாகை நகர் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் வைத்து இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்தனர்.இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்ததால் போதுமான அளவிற்கு விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது. நாகை உழவர் சந்தையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைவித்த கத்தரிக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், கீரை வகைகள், மாங்கனி, தேங்காய் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்தனர். இவ்வாறு எந்த நேரமும் கூட்டம் நிறைந்த நாகை உழவர் சந்தையை கஜா புயலின் போது சேதமடைந்தது. அவ்வாறு சேதமடைந்த உழவர் சந்தையை இதுவரை சீர்செய்யாமல் வேளாண் துறையை சேர்ந்த அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். உழவர் சந்தை மேற்கூரையின் மீது விழுந்த மரங்களை கூட அப்புறப்படுத்தாமல் அப்படியே வைத்திருப்பது மிகவும் வேதனையாக உள்ளது.