களக்காடு, ஜூன் 19: களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி லெவஞ்சிபுரம் பள்ளிவாசல் தெருவில் 600க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடை மற்றும் கழிவுநீர் வெளியேற பள்ளிவாசல் தெருவில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் தேங்கும் கழிவு மற்றும் சாக்கடை நீர் இந்த வாறுகால் வழியாக செல்கிறது. இந்நிலையில் இந்த வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாறுகால் நிரம்பி சாக்கடை மற்றும் கழிவுநீர்கள் தெருவில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது திருக்குறுங்குடி பகுதியில் சாரல் மழை தீவிரமடைந்து உள்ளதால் மழைநீரும் சாக்கடை நீருடன் சேர்ந்து செல்கிறது. தெருவில் சாக்கடை நீர் பெருக்கெடுப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.