சின்னசேலம், ஜூன் 19: கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1998ல் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், மூக்கப்பன் முயற்சியால் முதல்வராக இருந்த கருணாநிதி கரும்பு அரவையை துவக்கி வைத்தார். அதன்பிறகு விவசாயிகள் நலன்கருதி கடந்த 2012-2013ல் சிறப்பு கரும்பு அரவைப்பருவமும் துவங்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலை இயங்குவதற்கான மின்சாரத்தை ஒப்பந்த அடிப்
படையில் காகித ஆலை நிறுவனம் நிலக்கரியை எரித்து நீராவி மின்சாரத்தை வழங்குகிறது. அதற்கு பதிலாக சர்க்கரை ஆலை நிறுவனம் காகிதம் தயாரிக்க தேவையான கரும்பு சக்கையை தருகிறது. இந்த கோமுகி சர்க்கரை ஆலையில் முதன்மை உற்பத்தியான சர்க்கரையுடன், கரும்பு சக்கை, கழிவுபாகு, கழிவு மண் போன்றவை கூடுதல் உற்பத்தி பொருளாக கிடைக்கிறது. இதனால் இந்த சர்க்கரை ஆலை பொதுவாக லாபகரமாகவே இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கரும்பு அரவையை துவக்கிய காலத்தில் இருந்து ஒரு கரும்பு அரவை பருவத்திற்கு சராசரியாக 4 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு வருகிறது. இடையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு விவசாயிகளின் நலன்கருதி சிறப்பு கரும்பு அரவையும் துவக்கி சுமார் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்து வருகின்றனர்.