விழுப்புரம், ஜூன் 19: விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான சிறப்பு ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள், ஊராட்சிகள் உதவி இயக்குநர்கள், ஊரகவளர்ச்சி செயற்பொறியாளர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறும் வகையில் அனுமதி அளிக்கப்பட்ட பணிகளின் செயலாக்கம் குறித்து பணிகள் வாரியாக ஆய்வு செய்யப்பட்டது. கிராம ஊராட்சிகளைப்பொறுத்தவரை முன்னேற்றத்தில் உள்ள பணிகளை உதவி இயக்குநர் நிலையிலான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் இதர களப்பணியாளர்கள் கள ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பணிகளை செயல்படுத்தி முடிக்க அறிவுரை வழங்கப்பட்டது. பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் ஆகியோருக்கு ஊராட்சிகளை பகிர்ந்து ஒதுக்கீடு செய்து தினசரி குடிநீர் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை கண்காணித்திடவும், ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் ஆட்சியரிடம் நேரில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. முறையற்ற குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிப்பு செய்து அதற்கான அறிக்கையை தினசரி விழுப்புரம் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.