ஓசூர், ஜூன் 13: ஓசூர் காமராஜர் காலனியில் பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓசூர் காமராஜர் காலனியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. ஓசூர் உழவர் சந்தை, தக்காளி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், தார்சாலை சிதிலமடைந்து தற்போது மண் சாலையாக காட்சி அளிக்கிறது. மழை பெய்யும் நாட்களில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.