சேலம், ஜூன் 11: பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து தனியார் பள்ளி வாகனங்கள் கடந்த மாதம் 31ம் தேதி வரை ஆய்வு செய்யப்பட்டது. இதில், பாதுகாப்பு குறைப்பாடுடன் காணப்பட்ட வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு வந்து, மீண்டும் சோதனைக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 450க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 3498 பள்ளி வாகனங்களில், 2950 வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். அதில் குறைபாடுடன் கண்டறியப்பட்ட 206 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும், ஆய்வுக்கு வராத 342 பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டது.