திருவள்ளூர், ஜூன் 11: ஜமாபந்தியில் ஆதரவற்றோர் உதவித்தொகை கேட்டு ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து தகுதியற்றவர்களையும் அதிமுகவினர் விண்ணப்பிக்க வைப்பதால் வருவாய் துறையினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது குறுவட்டம் வாரியாக அனைத்து தாலுக்கா அலுவலகங்களிலும் ஜமாபந்தி நடந்து வருகிறது. மற்ற ஜமாபந்திகளுடன் ஒப்பிடுகையில், தற்போது ஏராளமான விண்ணப்பங்கள் முதியோர், விதவை உதவித்தொகை கேட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் ஜமாபந்தி துவங்கிய முதல் நாளில் மட்டும் 3,700 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டு உள்ளன. இதில், 2,000க்கும் மேற்பட்ட மனுக்கள் ஆதரவற்றோர் உதவித்தொகை கேட்டு வந்தவையாகும். இதன் பின்னணியில் மாஜி வார்டு கவுன்சிலர்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள் இருப்பதால் அனைத்தையும் பரிசீலிக்க வலியுறுத்தி ‘பிரஷர்’ கொடுக்கப்படும் என்ற அச்சம் வருவாய் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கிடைக்கும் என்ற ஆசையில், ஒவ்வொருவரும் பல ஆயிரம் செலவழித்து விண்ணப்பித்து வருகின்றனர்.