திருக்கோவிலூர் அருகே ரேஷன் கடை ஊழியர் மர்ம சாவு

திருக்கோவிலூர், ஜூன் 5:  திருக்கோவிலூர்  அடுத்த வி.புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் மகன்  அறிவுநிதி(30). சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில்  பணிபுரிந்து வந்தார். இவரது மூத்த சகோதரி சத்யாவை திருவெண்ணெய்நல்லூரில்  உள்ள ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இளைய சகோதரி கீழக்கொண்டூர் கிராமத்தை சேர்ந்த வேற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை  திருமணம் செய்து கொண்டதால் அறிவுநிதி மனஉளைச்சலில் இருந்தார். அதனால்  குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் பைக்கில்  திருக்கோவிலூர் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது  சாலையின் குறுக்கே நாய் வந்ததால் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில்  இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் அறிவுநிதி சிகிச்சை  பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு  வெளியே சென்றவர் அந்திலி கிராமத்தில் சாலையோரம் மயங்கிய நிலையில்  கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு திருக்கோவிலூர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மகன் சாவில்  சந்தேகம் இருப்பதாக அவரது தாய் பச்சையம்மாள் அரகண்டநல்லூர் போலீசில்  புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ  கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: