திருவாரூர், மே 25: திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கத்தில் 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் இருந்து வருகிறது. இந்த மின் நிலையம் மூலம் திருவாரூர், கொரடாச்சேரி, குடவாசல், நீடாமங்கலம், நன்னிலம், பேரளம், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி மற்றும் கீழ்வேளூர், நாகை காரைக்கால் உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் மின் வினியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த துணை மின் நிலையத்திற்கு நெய்வேலி, தூத்துக்குடி, காரைக்குடி போன்ற மின் பாதைகளிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் நெய்வேலி பாதையிலிருந்து திருச்சி மற்றும் தஞ்சை வழியாக திருவாரூர் வரும் மின் பாதையில் தஞ்சை அருகே அழுந்தூர் என்ற இடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மின்வினியோகம் சரிவர இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மின்சாரம் நிறுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் மாற்றி மாற்றி வழங்கும் பணி நடைபெற்று வருவதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.