நாகை, மே 25: நாகையில் பல மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ள புதிய கடற்கரை சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.நாகை புதிய கடற்கரை சாலையில் நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திட்ட இயக்குநர், எஸ்பி, கலெக்டர் ஆகியோரின் முகாம் அலுவலகம், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் வந்தால் தங்கும் பயணிகள் தங்கும் விடுதியான தமிழக அரசின் சுற்றுலா மாளிகை உள்ளிட்டவை உள்ளது. இந்த சாலை வழியாக காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கரம் வாயிலாக ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் புதிய கடற்கரைக்கு செல்கின்றனர்.அதேபோல் வீட்டுவசதி வாரிய குடியிப்பும் இந்த பகுதியில் தான் உள்ளது. இவ்வாறு மிகவும் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் இந்த சாலை பாதியில் போட்டும், பாதியில் போடாமலும் விட்டு வைத்துள்ளனர். குறிப்பாக நாகை ஏழைபிள்ளையார் கோயில் பகுதியிலிருந்து நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சாலை போடாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சாலை மிகவும் குண்டும், குழியுமாகவே உள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வருவோர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்களை சந்திக்கின்றனர். சாலையை சீர் செய்ய வேண்டும் என்று பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை. இந்த சாலையை சீர் செய்ய வேண்டும் என்று நாகை நகராட்சி நிர்வகமோ அல்லது நெடுஞ்சாலைதுறையோ முன்வருவது இல்லை.