திண்டிவனம், மே 25: திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் இயங்கி வரும் ஓட்டல் ஒன்றில் நேற்று காலை 3 பேர் உணவு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து திண்டிவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் ஓட்டலில் தகராறு செய்த 3 பேரையும் திண்டிவனம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், விக்கிரவாண்டி தாலுகா சித்தேரி கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் அருணாச்சலம்(35), திருக்கோவிலூர் தாலுகா சோழ பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் வேலியப்பன்(35) மற்றும் அதே ஊரை சேர்ந்த முனியன் மகன் பாண்டியன் (42) என தெரியவந்தது.இவர்கள் 3 பேரும் திண்டிவனம், மயிலம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததும், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தாக்கி தங்க நகைகளை பறித்ததும் தெரிய வந்தது.