ராமநாதபுரம், மே 22: பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் தேர்வு எழுதாதவர்களுக்காக பள்ளி கல்வி துறை சார்பில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த சில நாட்களிலேயே சிறப்பு தேர்வு நடத்தப்படுகிறது. பல்வேறு காரணங்களுக்காக தேர்வு எழுத முடியாதவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் இத்தேர்வினை எழுதி பயனடையலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பு துணைத்தேர்வு எழுத 771 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள், தேர்வு எழுத தவறிய மாணவ, மாணவிகளுக்காக வருகின்ற ஜூன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட உள்ளது. துணை தேர்வை எழுத விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்கள் கடந்த 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்தனர். இதில் விடுபட்டவர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தக்கல் முறையில் மே 16, 17ம் தேதிகளில் விண்ணப்பங்களை கொடுக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி சிறப்பு துணைத் தேர்வுக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களான ராமநாதபுரம் 215, மண்டபம் 221, பரமக்குடி 335 பேர் பேர் விண்ணப்பித்துள்ளனர். மொழிப்பாடங்களான தமிழில் 82, ஆங்கிலம் 111, இயற்பியல் 102, வேதியியல் 76, பொருளாதாரம் 69 என மொத்தம் 771 பேர் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14 முதல் 21 வரை நடக்கிறது.
மாவட்டத்தில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுவாட்ஸ் மேல் நிலைப்பள்ளி, ராமநாதபுரம், மண்டபம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவாகள் நேஷனல் அகாடமி பள்ளி, பட்டிணம்காத்தான், பரமக்குடி கல்வி மாவட்டத்ததை சேர்ந்தவர்கள் கீழ முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி பரமக்குடி பள்ளிகளில் தேர்வு நடைபெறும் மையங்கள் என பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.