ஆணவக் கொலைகளை தடுக்க உரிய நடவடிக்கை தேவை

திருப்பூர், மே 17: திருப்பூர் மாவட்ட அம்பேத்கர் பெரியார் கலப்பு திருமணம் செய்தோர் நலச்சங்கத்தினர் இணைச் செயலாளர் குணசேகரன் தலைமையில் கலெக்டரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அசோக் என்பவர் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த கிருத்திகா தேவி என்ற பெண்ணை கடந்த 12ம் தேதி அன்று சாதி மறுப்பு காதல் திருமணம் எங்கள் சங்கத்தின் உதவியுடன் செய்து கொண்டார். இது தொடர்பாக மணப்பெண்ணின் உறவினர்கள் பெண்ணை காணவில்லை என ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அன்றைய தினம் காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். ஆனால், வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்ற காரணம் கூறி, காதல் தம்பதிகளின் பாதுகாப்பு மனுவை ஏற்பதில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரையும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளோம். பெண்ணின் உறவினர்கள் சங்க நிர்வாகிகளை அச்சுறுத்துகின்றனர். தம்பதியினருக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சாதி ஆணவக் கொலைகளை தடுக்க காதல் தம்பதியினருக்கு மாவட்ட நிர்வாகம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: