உடுமலை, மே 17:உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை கல்வி மாவட்டத்தில் 21 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 15 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 5 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் அடங்கும். இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் மாநிலத்தில் முதல் இடம், 11ம் வகுப்பில் மாநில அளவில் 2ம் இடம் பெற்று சாதனை புரிந்ததற்கு உடுமலை பகுதி பள்ளிகளின் பங்கு மிக அபரிமிதமானது. ஆனால் உடுமலை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி, மின்சார வசதி, ஆய்வக வசதி, சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், பேருந்து வசதி மிகவும் குறைவாகவே உள்ளது. பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லை.