கடையநல்லூர், மே 17: கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம்சக்தி பராசக்தி என்ற கோஷம் விண்ணை முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடையநல்லூரில் பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 8ம் தேதி காலையில் துவங்கியது. விழாவை முன்னிட்டு அன்று காலையில் அம்பாள் தீர்த்த உற்சவம், காப்புகட்டுதல் நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் ஒவ்வொரு சமுதாயத்தினரால் பால்குடம் ஊர்வலம், பூந்தட்டு, மாக்காப்பு அலங்கார தீபாராதனைகள், இரவில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது.