கிருஷ்ணகிரி, மே 17: கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மார்ச் 2019ல் நடந்த மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் வருகை புரியாதவர்கள், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைத் தேர்வெழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க இயலாமல், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தனித்தேர்வர்கள், சிஇஓ அலுவலகத்தில் தங்களது விண்ணப்பத்தை இன்றைக்குள்(17ம்தேதி) பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய வரும் போது, தமது மதிப்பெண் பட்டியலின் நகலினையும், தேர்விற்கு வருகை புரியாதவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினையும் எடுத்து வந்து, பதிவு செய்யும் அலுவலரிடம் காண்பிக்க வேண்டும்.