வேதாரண்யம்,மே 16: வேதாரண்யம் தாலுகா கடற்கரையோர கிராமங்களில் இலங்கையில் குண்டு வெடிப்பு சமபவங்களின் எதிரொலியாக கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடைபெறுகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அடுத்தடுத்து நடந்த 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு அருகாமையில் கோடியக்கரை இருப்பதால் குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட தீவிரவாதிகள் கோடியக்கரை கடலோர பகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, மணியன்தீவு, புஷ்பவனம், வௌ்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடலோர காவல் குழும போலீசார், வேதாரண்யம் சட்ட ஒழுங்கு போலீசார் கடந்த 25 நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கியூ பிராஞ்ச் போலீசார் கடற்கரை முழுவதும் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.