காரைக்கால் கோயில்பத்து ராஜயோக பத்ரகாளியம்மன் கோயில் உற்சவம் தொடக்கம்

காரைக்கால், மே 16:  காரைக் கோயில்பத்து திரவுதியம்மன், ராஜயோக பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காரைக் கோயில்பத்து பகுதியில் உள்ள திரவுபதியம்மன், ராஜயோக பத்ரகாளியம்மன் இக்கோயிலில் 18ம் ஆண்டாக அக்னி சட்டி வசந்த திருவிழா நடைபெறுகிறது. கடந்த 12ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா முறைப்படி தொடங்கும் விதமாக நேற்று முன்தினம் இரவு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு அம்பாள் பிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில், வரிசை எடுத்தல், அர்ச்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. இன்று (16ம்தேதி) இரவு துகில் தரிதல் நிகழ்ச்சியும், நாளை (17ம் தேதி) மாலை காரைக்கால்மேடு கிராமத்திலிருந்து தவசுமர ஊர்வலமும், இரவு தவசுமரம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 18ம் தேதி மாலை காளியம்மன் புறப்பாடும், இரவு அரவாண் கடப்பலியும் நடைபெறவுள்ளது. 19ம் தேதி கர்ண மோட்சம் நடைபெறுகிறது. பின்னர், 20ம் தேதி மாலை சக்தி கரகம் எடுத்தல், இரவு அம்பாள் வீதியுலா, 21ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு வழிபாடு, 22ம் தேதி விடையாற்றியாக தர்மராஜ பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. காரைக்கால் நகரத்தில் அமைந்திருக்கும் இக்கோயிலில் கிராமப்புற கோயிலில் நடத்தப்படுவதுபோல பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தப்படுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Related Stories: