திண்டுக்கல், மே 10: சீலப்பாடி காந்திஜிநகரில் குப்பைகளை முறையாக அள்ளாததால் பொதுமக்கள் நோய் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்டது காந்திஜி நகர். திண்டுக்கல்- திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் இறக்கத்தில் உள்ள இப்பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காந்திஜி நகர் செல்லும் வழியில் ஊராட்சி சார்பில் 2 இரும்பு குப்பை தொட்டிகள் வைத்துள்ளனர். இப்பகுதி மக்கள் இதில் முறையாக குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால் ஊராட்சி நிர்வாகமோ இந்த தொட்டிகளில் இருந்து குப்பைகளை முறையாக அள்ளுவதில்லை. இதனால் தொட்டிகள் நிரம்பி குப்பைகள் சாலையில் கிடக்கின்றன. இந்த அவலத்தால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.