ஆண்டிபட்டி, மே 9: ஆண்டிபட்டி அருகே உள்ள ஜி.ராமலிங்கபுரம் கண்மாய் வளைவினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் பலி நடக்கும் முன் குளத்துக் கரையின் உயரத்தை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டி ஊராட்சியில் ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் கிழக்குப் பகுதியில் குளத்தை ஒட்டியே நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலை ஆண்டிபட்டியில் ஆரம்பித்து கன்னியப்பபிள்ளைபட்டி, எரதிம்மக்காள்பட்டி, ஜி.உசிலம்பட்டி வழியாக கண்டமனூர் மாநிலச்சாலையை இணைக்கிறது. மேலும் இப்பகுதி விவசாய நிலங்களுக்கும், விளைந்த காய்கனிகளை ஏற்றுவதற்கு அதிக அளவிலான வாகனங்கள் வந்து செல்வது மட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் என ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வரும் முக்கியச் சாலையாக திகழ்கிறது.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஜி.ராமலிங்கபுரம் குளத்து வளைவில் எதிரே வாகனங்கள் வருவது தெரியாத காரணத்தினால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெறுவது மட்டுமின்றி உயிர்பலிகளும் ஏற்படுகிறது.