நெல்லை, மே 9: ஆலங்குளம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டபோதும் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என பூங்கோதை எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் நேற்று மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 36 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஆலங்குளம், நெல்லையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மாயமான்குறிச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகனும், 9ம் வகுப்பில் இருந்து 10ம் வகுப்புக்கு தேர்ச்சிபெற்றவருமான மகேந்திர குமார் (15) நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பூங்கோதை எம்எல்ஏ பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி அளிக்குமாறு மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார்.