ஓமலூர், மே 7: தாரமங்கலத்தை மையமாக கொண்டு பனைபொருள் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என பனை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்பனை, யாழ்பாணம் பனை என பல்வேறு ரக பனைமரங்கள் உள்ளன. இந்த மரங்களில் இருந்து பதனீர், பனை வெல்லம் (கருப்பட்டி), பனை ஓலை பொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இங்குள்ள நாட்டு பனை மரங்களை பாதுகாக்கும் வகையிலும், பனைமர விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பனை பொருள் பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு பயிற்சி நிலையம் அமைத்தால், அதன் மூலம் பதனீர், பனைவெல்லம், ஓலை பொருட்கள் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், பனை தொழிலாளர்களும், பொதுமக்களும் அதிகளவில் பயனடைவார்கள். இதன்மூலம் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.