பொள்ளாச்சி, ஏப். 30: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அரசு பள்ளி, நகராட்சி பள்ளி, சுயநிதி பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளி என மொத்தம் 99 பள்ளிகளில் படித்த 5768 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். கல்வி மாவட்டத்திற்குட்பட்ட வால்பாறை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் உள்ள மொத்தம் 39 மையங்களில் பொது தேர்வு நடந்தது. இதனிடையே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியானது. கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகம் முன்பு, காலை சுமார் 9.30மணியளவில் மாணவர்கள் பெயர் மற்றும் மதிப்பெண் பட்டியலுடன் தகவல் அறிக்கை இடத்தில் ஒட்டப்பட்டது. அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண்களை மாணவர்கள் ஆர்வமுடன் பார்க்க சென்றனர். வெற்றிபெற்ற மாணவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.