குண்டும், குழியுமான நகர், நல்லம்பாக்கம் தார் சாலை

மரக்காணம், ஏப். 25:  மரக்காணம்  ஒன்றியத்திற்குட்பட்டது நகர், நல்லம்பாக்கம் கிராமங்கள். இப்பகுதியைச்  சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இதில் 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்  ஆவர். இங்குள்ளவர்கள் புதுவை, மரக்காணம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு  இவ்வழியாகத் தான் செல்லவேண்டும். இது போல் இப்பகுதியில் விளையும் அனைத்து  விவசாய பொருட்களையும் இவ்வழியாகவே எடுத்துசென்று வெளியிடங்களில் விற்பனை  செய்யவேண்டும். இப்பகுதிக்கான தார் சாலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பல  லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்டது. ஆனால் இந்த சாலையை மேற்கொண்டு அதிகாரிகள்  பராமரிப்பு செய்யவில்லை. இதனால் இச்சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து  கரடு முரடாக காணப்படுகிறது.

இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் அனைத்து  வாகனங்களும் அடிக்கடி பழுதாகிவிடுவதால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும்  அவதிப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுகொடுத்தும் இதுவரையில் எந்த  நடவடிக்கையும் இல்லை என்று குறை கூறுகின்ரனர். எனவே இப்பகுதி  பொது மக்களின் நலன் கருதி முற்றிலும் சேதமடைந்துள்ள நகர்,  நல்லம்பாக்கம் ஊராட்சிகளின் தார் சாலையை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: