கிருஷ்ணகிரி, ஏப்.24: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பொதுமக்களை கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிகபட்சமாக 105 டிகிரி வரையில் வெயில் அடித்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் பகல் நேரத்தில் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் யாரும் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது. இரவில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.கெலமங்கலம் - ராயக்கோட்டை சாலையில் விருப்பாச்சி நகர் முருகன் கோயில் அருகில் ஆலமரம் சாலையில் சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதுபோல் அரசு பள்ளியின் வளாகத்தில் மழைநீர் தேங்கி குளம்போல மாறியது. ஒட்டு மொத்தமாக இந்த மழையால் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் குளிர் காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்(மி.மீ.,) : ஓசூரில் அதிகபட்சமாக 50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி 44.20, ஊத்தங்கரை 33.20, பாரூர் 19.20, சூளகிரி 17, தேன்கனிக்கோட்டை 15, தளி 10, போச்சம்பள்ளி 8.20, நெடுங்கல் 4.20 என மொத்தம் 201 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.