கீழக்கரை, ஏப்.24: வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்கள் உள்ள நிலையில், உயிருடன் இருப்பவர்கள் பெயர் நீக்கப்பட்டதால் முறைகேடு நடந்ததாக கூறி வழக்கு தொடர போவதாக திமுக நகர் செயலாளர் பசீர் அகமது தெரிவித்துள்ளார். கீழக்கரையில் மொத்தம் 30ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 17 ஆயிரத்து 36 வாக்குகள் மட்டுமே பதிவாகியது. ஆனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் வாக்களிக்க முடியாது என்று திருப்பி அனுப்பினர். இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் கடும் முறைகேடு நடந்திருப்பதாக திமுக நகர் செயலாளர் பசீர் அகமது குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கீழக்கரையில் பெரும்பாலானவர்கள் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் தொழில் நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் தேர்தலுக்காக சொந்த ஊருக்கு திரும்பி இருந்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் வாக்களிக்க முடியவில்லை காரணம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததே. ஆகவே தேர்தல் ஆணையம் உடன் நடவடிக்கை எடுத்து இந்த முறைகேட்டை சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்’ என்றார்.
இதுகுறித்து நெய்னா முகம்மது கூறியதாவது, நானும் எனது குடும்பமும் ஒரு தேர்தல் விடாமல் வாக்களித்து வருகின்றோம். ஆனால் இந்த முறை வாக்களிக்க செல்லும் போது எனது பெயரும், எனது மனைவியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி வாக்களிக்க விடவில்லை. இதுபோல் நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பெயரை நீக்கியுள்ளனர். இதில் என்ன வேதனை என்றால் பல வருடங்களுக்கு முன் இறந்தவர்களின் பெயர்கள் எல்லாம் வாக்காளர் பட்டியலில் உள்ளது, உயிருடன் இருக்கும் என்போன்றவர்கள் பெயர்களை நீக்கியுள்ளனர். இது திட்டமிட்டு சிறுபான்மையினரின் ஓட்டுகளை நீக்கி இருப்பார்களோ என்று தோன்றுகிறது. ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் வாக்காளர் படிவத்தில் உள்ள இந்த முறைகேட்டை சரிபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.