செம்பனார்கோவில், ஏப்.24: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்து பரசலூர் - வல்லம் தார் சாலையை சீர்படுத்தித்தர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.பரசலூர் அடுத்து கிராமங்களான வல்லம் பகுதியில் 1500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இப்பகுதி விவசாய நிலம் நிறைந்த பகுதியாகும். இங்கு சாகுபடியான சம்பா, குறுவை, தாளடி என பருவத்திற்கேற்ப விவசாயம் தடையில்லாமல் நடக்கும். இப்படிப்பட்ட விவசாய கிராமத்திற்கு விவசாயம் சம்பந்தப்பட்ட உரம், பூச்சிக்கொல்லி மருந்து, விதைநெல் போன்ற அனைத்திற்கும் பரசலூர் வந்துதான் செல்ல வேண்டும். அங்கு சாகுபடி செய்த நெற்பயிர்களையும், விவசாயிகள் விற்பதற்கு பரசலூர் வந்துதான் மயிலாடுதுறை செல்ல நேரிடும்.
அப்போது அவர்கள் டிராக்டர், மினிலாரி, லாரி போன்ற வாகனங்களின் தான் செல்ல வேண்டும். கடந்த காலங்களில் இப்பகுதி மினி பேருந்து வசதி இருந்து வந்தது. மோசமான சாலையால் மினி பஸ் அடிக்கடி பழுதடைந்து நின்று விடுகிறது. தற்போது மினி பஸ் வசதியும் கிடையாது. இவர்கள் செம்பனார்கோவில் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் சுமார் 2கி.மீ. சுற்றித்தான் வரவேண்டும்.கடந்த இரண்டு ஆண்டிற்கும் மேல் இச்சாலையை யாரும் கண்டுகொள்ளுவதும் இல்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சீர்குலைந்த சாலையில் அடிக்கடி செல்வதால் பஞ்சர் ஒட்டும் கடைகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும் பரசலூர் - வல்லம் செல்லும் வழியில் மஹாராஜபுரம், கடுவேளி என சிறுகிராமமும் இருந்து வருகிறது. இப்பகுதிக்கு தெருவிளக்குகள் கூட கிடையாது. பல முன்னேற்றங்கள் அடைந்த காலகட்டத்தில் இன்னும் தார்சாலையில் கூட முன்னேற்றம் இல்லை. அதனால் இப்பகுதி மக்கள் எந்த இடையூறும் இல்லாமல் தங்களது தேவைக்கு பயணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரசலூர் - வல்லம் சாலையை உடனே சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.