கோமுகி அணையை தூர்வார நடவடிக்கை

சின்னசேலம், ஏப். 22: வறண்டு கிடக்கும் கோமுகி அணையை, பாசன விவசாயிகளின் நலன்கருதி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5865 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெற்று வருகிறது. கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன்மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர்.

கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் சம்பா பருவத்துடன் சேர்த்து மூன்று போகமும் நெல் அறுவடை செய்தனர். இதனால் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அந்த காலகட்டத்தில் செழிப்புடன் இருந்தனர். ஆனால் அதன்பிறகு கால மாற்றத்தால் பருவமழை பொய்த்து போனது. பெயரளவிலேயே மழை பெய்தது. அதுமட்டுமல்லாமல் கோமுகி அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அணை தூர்ந்துபோய் மணல், மண் மேடாக காட்சி அளிக்கிறது. மழைகாலத்தில் மலையில் இருந்து நீர்வரத்து இருக்கும்போது, நீரின் வேகத்தில் மண், மணல், சிறு, சிறு கற்களும் அடித்து வரப்பட்டு அணையில் நீர்பிடிப்பு வளாகத்தில் படிந்து வந்தது. காலப்போக்கில் நீர்பிடிப்பு பகுதி முழுவதும் மண்மேடாகி விட்டது. இதனால் 46 அடி உள்ள கோமுகி அணை மண்மேடாகி போனதால்  மழை காலத்தில் சுமார் 25 அடி அளவில் மட்டுமே அணையில் நீரை சேமிக்க முடிகிறது. இந்த நீரை கொண்டு ஒரு பருவம் மட்டுமே விவசாயம் செய்ய முடிகிறது.

சில நேரங்களில் ஒரு பருவத்திற்கே போதுமான நீர் இல்லாமல் நெற்கதிர் பயிர்கள் காய்ந்து போனதும் உண்டு. கோமுகி அணை விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், கச்சிராயபாளையம் சுற்றுவட்டார பகுதி மக்

களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.  அதனால் கோமுகி அணையை தூர் அள்ள வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டு சம்பா பருவ பாசனத்திற்கே  அணை நீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஒருசில விவசாயிகள் நெல் அறுவடை செய்ய முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். தற்போது கோமுகி அணை வறண்டு காணப்படுகிறது. தற்போது தூர் அள்ள நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள். அதேபோல தற்போது கோமுகி அணை உள்பகுதியில்  100 ஏக்கருக்கு மேல் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து தனிநபர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் அணையில் நீர்பிடிப்பு பகுதி அகலமாகும். அதன்மூலம் மழைகாலத்தில் அதிக அளவில் நீரை சேமிக்க முடியும். தற்போது அணை வளாகம் மண்மேடாக இருப்பதாலும், அதிக பகுதி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருப்பதாலும் மழைகாலத்தில் போதிய அளவு நீரை சேமிக்க முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் கோமுகி அணையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, தூர்வார உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயபாளையம் மற்றும் 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள்

பயனடைவார்கள்.

Related Stories: