காரைக்கால், ஏப்.18: நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் காவலர்கள் விருப்பு வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். யாருக்கும் ஆதரவான செயல்பாடு கூடாது. என, மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் அறிவுறுத்தியுள்ளார்.நாளை நடைபெறும் மக்களவை தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி ராகுல் அல்வால் பேசியது: நாளை நடைபெறும் மக்களவை தேர்தலில் நடத்தை விதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. அதனால், காவலர்கள் விருப்பு வெறுப்பின்றி பணி செய்ய வேண்டும். யாருக்கும் ஆதரவான செயல்பாடு கூடாது. காவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள நடத்தை விதிகளையும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளையும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். வாக்குச்சாவடி தலைமை அதிகாரியின் எழுத்துப்பூர்வ கடிதம் இல்லாமல், வாக்குச் சாவடிக்குள் காவல் அதிகாரிகள், காவலர்கள் செல்லக்கூடாது. என அறிவுறுத்தியதோடு, காவலர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் குறித்த விளக்க கையேட்டினை வழங்கினார்.