நெல்லை, ஏப். 18: நெல்லை தொகுதி வாக்குகள் எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளதால் இப்பகுதியில் இரவிலும் ஒளிரும் கூடுதல் மின்விளக்கு, சிசிடிவி கேமரா, தீயணைப்பு அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று முடிந்ததும், நெல்லை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்படுகின்றன. இரவு தொடங்கி நாளை காலை வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள், கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கும் பணி நடைபெறும். தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் இப்பணி நடக்கும். இந்த அறைகள் முன்பு 24 மணி நேரமும் துப்பாகி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். மேலும் கூடுதல் சிசிடிவி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது. கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் சேர்த்து மொத்தம் 26 கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொகுதி வாரியாக உள்ள பாதுகாப்பு அறைகளில் தலா 3 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கண்காணிப்பு டிவிக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.