தாராபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா

தாராபுரம்.ஏப்.16: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூச்சாட்டு திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பக்தர்கள் அமராவதி ஆற்றங்கரைக்கு சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு தீர்த்தம் செலுத்தினர். பிறகு பக்தர்கள் அலகு குத்தியும் பூவோடு எடுத்தும் அம்மனை தரிசித்து வந்தனர். தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு நகர்வலம் நடந்தது.   பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நிறைவு நாளான நேற்று அலங்கார வாகனத்தில் வடதாரை காமராஜ புரத்திலிருந்து தாரை, தப்பட்டை, மேளங்கள் முழங்க மாரியம்மன் உற்சவசிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.  நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் புத்தாடை அணிந்து தேன்,தினைமாவு கலந்து இனிப்பு மாவு செய்து அதில் வண்ணமயமான அலங்கார விசிறிகளை குத்தி, மாவில் நெய்விளக்கு ஏற்றிய தட்டுகளை ஏந்தியவாறு குலவையிட்ட வண்ணம் அம்மன் உற்சவ ஊர்வலத்தை பின் தொடர்ந்தனர். கோயில் வளாகத்தை அம்மன் ஊர்வலம் சென்றடைந்ததும் சிறப்புபூஜைகள் நடைபெற்றது.தொடர்ந்து மழை வேண்டியும், காடு,கழனிகள் செழித்து வாழ்க்கை வளம் பெறவும், துஷ்ட தேவதைகள் ஊரைவிட்டு வெளியேறி மக்கள் நோய் நொடியற்று வாழவும் வேண்டி பாரம்பரிய முறையில் கும்மியடித்து வழிபட்டனர்.

Related Stories: