திருக்கோவிலூர், ஏப். 10: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து பொதுக்கூட்டம் நகர செயலாளர் சிவா தலைமையில் நடந்தது. வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்எல்ஏ பேசுகையில், அதிமுக கூட்டணி ஒரு நவக்கிரக கூட்டணி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைகளில் தான் இருப்பார்கள். நவக்கிரக கடவுள்கள்போல் அவர்களின் கொள்கைகளும் அதேபோன்று தான் இருக்கும். ஜெயலலிதா மோடியை எதிர்த்து வந்தார். கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது டெல்லியை சேர்ந்த மோடியா அல்லது தமிழகத்தை சேர்ந்த இந்த லேடியா என்று கூறினார். எடப்பாடி அணி டெல்லியில் இருக்கும் மோடி எங்கள் டாடி என்று கூறி வருகின்றனர்.
தற்போது உள்ள கூட்டணியை உண்மையான அதிமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. 75 நாள் மருத்துவமனையில் இருந்த முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க இந்த மோடி வரவில்லை.