செம்பனார்கோவில், ஏப்.9: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் வேலன் வாய்க்காலில் சுகாதாரத்தை கெடுக்கும் வகையில் சாக்கடை கழிவுநீர் மழைநீர் வடிகால் மூலம் கலக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் சுகாதார கேடு ஏற்பட்ட நிலையில் வசித்து வருகின்றனர். செம்பனார்கோவில் வேலன் வாய்க்கால் காவிரியிலிருந்து பாசன வாய்க்காலாக பிரிந்து விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு ஏதுவாக திகழ்ந்து வந்தது. ஆனால் சில வருடங்களாக போதிய மழை இல்லாமலும், காவிரியில் சீரான தண்ணீர் இல்லாமல் இருந்ததால் பல வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் செடி, கொடிகளுடன் காடு மண்டி கிடந்தது. இதேபோல் வேலன் வாய்க்காலும் தூர்வாராமல் செடி, கொடிகளுடன் காடு மண்டி கிடந்தது. இந்த நிலையில் தற்பொழுது வேலன் வாய்க்கால் தூர்வாரப்பட்ட போதுதான் சில அதிர்ச்சி தரும் வகையில் அப்பகுதி மக்களுக்கு தெரிந்தது, வாய்க்காலில் சாக்கடை கழிவு நீர் கலக்கப்படுகிறது என்று. இதில் என்னவென்றால் மழைநீர் வடிகாலுக்காக அரசு அமைத்த வடிகாலின் மூலமாக பல ஹோட்டல்கள் பின்புறத்தில் குழாய் மூலமாகவும், கழிவுநீர் செல்வதற்கு சிமெண்ட் கட்டைகளை கட்டி மழைநீர் வடிகாலுடன் சேர்த்து விட்டுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள பல பேர் வீடுகள் வேலன் வாய்க்கால் பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் கழிப்பறை தொட்டி கட்டிருந்தாலும் அதிகாரிகள் பார்வைக்காக வைத்துக் கொண்டு பைப்புகளை போட்டு வேலன் வாய்க்காலில் நேரடியாக கலந்து வருகின்றனர்.