காரைக்குடி, ஏப்.4: தேர்தல் ஆணையத்தின் கிடுக்குபிடி உத்தரவால் நகை மற்றும் கைத்தறி சேலை வியாபாரம் முடங்கிபோய் உள்ளது.
காரைக்குடியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கைத்தறி நெசவுத்தொழில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செட்டிநாடு காட்டன் சேலைகள் மிகவும் பிரபலம். மொத்த வியாபாரிகள் மூலம் மதுரை, சென்னை, கோவை போன்ற மாவட்டங்களுக்கும், பெங்களூரு, டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தலைச்சுமையாக விற்பனை செய்வது உண்டு. நெசவுத் தொழிலை நம்பி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தற்போது கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில் செட்டிநாட்டு காட்டன் சேலைகளுக்கு நல்ல மவுசு இருக்கும். இதனால் தொழில் சூடுபிடித்து உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் மொத்தமாக சேலை மற்றும் பொருட்களை கொண்டு செல்லக்க கூடாது. உரிய ஆவணம் வேண்டும் என பல்வேறு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இப்பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு கோவை மற்றும் மதுரை போன்ற பகுதியில் இருந்து அதிக அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொண்டு வரப்படும். தற்போது உள்ள கிடுக்குபிடி உத்தரவால் இப்பொருட்களின் வரத்தும் இல்லை.