திருப்புத்தூர், மார்ச் 26: திருப்புத்தூர் அடுத்த பட்டமங்கலம் அருகே தவசியேந்தல்பட்டியில் உள்ள பயணியர் நிழற்குடையின் மேற்கூரை பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த கட்டிடத்தில் நிற்க பொதுமக்கள் அச்சப்படுகிறன்றனர். திருப்புத்தூர்-கல்லல் செல்லும் ரோட்டில் பட்டமங்கலத்தை அடுத்துள்ள தவசியேந்தல்பட்டி விலக்கில் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை கட்டி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கல்லல், திருப்புத்தூர், மதகுபட்டி, சொக்கநாதபுரம், திருக்கோஷ்டியூர், பட்டமங்கலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக வயதானவர்கள், கைகுழந்தைகளுடன் பெண்கள் உள்ளிட்டோர் இந்த நிழற்குடையில் தான் காத்திருப்பார்கள். மேலும் இந்த விலக்கு ரோட்டில் இருந்து தவசியேந்தல்பட்டிக்கு 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். தற்போது இந்த நிழற்குடையின் உள்புறத்தில் உள்ள மேற்கூரையின் சிலாப்புகள் பெயர்ந்து விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் நிழற்குடை கட்டடமும் போதிய பராமரிப்பு இன்றி ஆங்காங்கே வெடித்து காணப்படுகிறது. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பொதுமக்கள் உள்ளே நிற்க அச்சப்படுகின்றனர். ரோட்டில் வெளியில் நிற்கின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள இந்த பயணியர் நிழற்குடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.