நாகை, மார்ச், 22: நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மயிலாடுதுறை தொகுதி செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் செலவின கண்காணிப்பாளர் சஞ்சய்முகர்ஜி தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்காக மேற்கொள்ளப்படும் செலவினம், வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை மேற்கொள்ளப்பட்ட செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக்கணக்காக கருதப்படும். பொதுகூட்டங்கள், சுவரொட்டிகள், தட்டிகள், வண்டிகள், செய்தித்தாள் அல்லது மின்னணு ஊடகத்தில் விளம்பரங்கள் போன்ற பிரசாரங்களும், வாக்காளர்களை கவரும் நோக்கத்துடன் அவர்களுக்கு பணம், மது அல்லது பரிசு மற்றும் வேறு பொருட்களை வழங்குவதும் வேட்பாளரின் செலவு கணக்கில் அடங்கும். தேர்தல் முடிவு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேர்தல் செலவின் உண்மையான கணக்கை அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட வாகன பயன்பாட்டிற்கான அனுமதியினை வாகனத்தின் முன்பக்கத்திரையில் காட்சிக்கு தெரியுமாறு வைக்க வேண்டும். மேலும் அனைத்து பதிவேடு, தேர்தல் பிரசார காலத்தில் குறைந்தது மூன்று முறையாவது தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.