திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 21: திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சிறுமதுரை கிராமம். இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர் திருவெண்ணெய்நல்லூர்-திருக்கோவிலூர் சாலையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சாலையை சிறுமதுரை கிராம மக்கள் மட்டுமல்லாது பையூர், சேத்தூர், மாரங்கியூர், கொங்கராயநல்லூர் உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்யப்படும் கரும்புகளை ஏற்றி சென்று பெரியசெவலை செங்கல்வராயன் சர்க்கரை ஆலைக்கு செல்ல வேண்டி நிலை உள்ளது. சிறுமதுரை வழியாக செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் சாலை சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதைதொடர்ந்து சாலையின் இரு புறங்களிலும் மண் அணைக்கும் பணி துவங்கியது. இதில் அப்பகுதியில் உள்ள மலட்டாற்றில் இருந்து மணல் எடுத்து சாலையோரம் அணைக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எதிரே கனரக வாகனங்கள் வரும் போது சாலையோரம் ஒதுங்குகின்றனர். அப்போது மணலில் சிக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்து வருகின்றனர்.