உளுந்தூர்பேட்டை, மார்ச் 19: உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு துணை போகும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கோஷம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக காவல்துறைக்கு எதிராகவும் வழக்கறிஞர்கள் கோஷம் போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்கறிஞர்கள் அன்பழகன், ராவணன், வேதகிரி, கிருபாபுரி மற்றும் சந்திரசேகரன், அருள், ஆறுமுகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.