கொள்ளிடம், மார்ச் 12: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரநாதபுரம் கிராமம் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் ராமு(73). கூலித்தொழிலாளி. இவர் தொடர்ந்து பொதுமக்களின் சேவையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் தனது இரண்டு கண்கள் மற்றும் உடலைத்தானம் செய்யப்போவதாக தனது மனைவி மற்றும் மகன்களுக்கு தெரிவித்தார். இறந்த பிறகு மண்ணில் அழுகி யாருக்கும் பயன்படாமல் போகும் உடலும், கண்ணும் மற்றவர்களுக்கு பயன்படும் என்பதனைத் தெரிவித்தார். இதனை இவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பாண்டிச்கேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தனது இரண்டு கண்களையும் தானம் செய்வதற்கான முழு சம்மதத்தையும் உடலை பாண்டிச்சேரி மகாத்மாகாந்தி மருத்துவனைக்கு தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு உறுதியளித்திருந்தார்.