பெரம்பலூர், மார்ச் 7: சிவராத்திரியையொட்டி பாளையம் கிராமத்தில் மயான சூறை நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெண்களை முறத்தால் அடிக்கும் நூதன வழிபாடு நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்டது பாளையம் கிராமம். இந்த ஊரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் சார்பில் மகா சிவராத்திரி, மயான சூரை திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 4ம் தேதி இரவு 10 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 5ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு மூலஸ்தான அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம், இரவு 10 மணிக்கு கொடியேற்றம், குடியழைத்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று (6ம் தேதி) காலை 9 மணிக்கு காளி புறப்பாடு நடந்தது. இதில் மயானத்தில் குவிந்த பெண்களின் நோய், பிணி நீங்க, வேண்டுதல் நிறைவேற கரிய நிறத்தில் காளிவேடமிட்டவர் முழங்காலிட்டு காத்திருந்த பெண்களை தலையில் முறத்தால் அடித்தார். பின்னர் மயானத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை வழிமறித்து இடையிடையே பெண்கள் முழங்காலிட்டு முறத்தால் அடி வாங்கினர்.