ஈரோடு, பிப். 27: ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனை பகுதியில் ரூ.58.54 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை 28ம்தேதி முதல்வர் எடப்பாடி பழனி–்ச்சாமி திறந்து வைக்க உள்ளார். இதற்காக, ஈரோடு பிரப்ரோடு சி.எஸ்.ஐ. பள்ளி மைதானம் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே, பெரியமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை சி.எஸ்.ஐ. நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், இங்கு விழா நடத்த பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உடனடியாக இடத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால், வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லை என காரணம் கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகனங்களை நிறுத்துவதற்கும், பொதுமக்கள் வந்து செல்லவும் எளிதாக இருக்க கூடிய வ.உ.சி.பூங்கா மைதானத்தை தேர்வு செய்தனர். உடனே பூஜை போடப்பட்டு பந்தல் அமைக்கும் பணிகள் நடந்தது. ஆனால், இந்த பூங்காவில் விழா நடத்தினால் ஆட்சிக்கு முடிவு வந்து விடும் என்பதற்காக நேற்று திடீரென பந்தல் அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி கூறினர். இதனால் விழா நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.