காரைக்குடி, பிப்.20: மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் பால்குட விழா துவங்க உள்ள நிலையில் பல லட்சம் பக்தர்கள் பால்குடம் எடுத்து செல்லும் சாலைகள் நடக்க கூட முடியாத அளவில் குண்டும் குழியுமாக உள்ளது. இதை சரி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்குடி நகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் நடந்து வருவதால் பல்வேறு சாலைகள் பயன்படுத்த முடியாத அளவில் குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதியை பொறுத்தவரை மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் மாசி பங்குனி விழா வரும் 26ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து மார்ச் 19ம் தேதி பால்குட விழா நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். கண்டனூர் சாலை அருகே உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து அங்கிருந்து பல்வேறு வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைவார்கள். 4 கிலோ மீட்டருக்கு மேல் சிறுவர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் காலணி அணியாமல் பால்குடம் எடுத்து செல்வார்கள்.