×

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு உதவித்தொகை

கிருஷ்ணகிரி, பிப்.15: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், பதக்கம் வென்றவர்களுக்கு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018-19ம் கல்வி ஆண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தமிழகத்தில் உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக் கழகத்தில் பயிலும் தலைச்சிறந்த விளையாட்டு வீரர்,வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆணையத்தின் இணையதளம் (www.sdat.tn.gov.in) மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ₹10 ஆயிரம், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ₹13 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 1.7.2017 முதல் 30.6.2018 முடியவுள்ள காலக்கட்டத்தில், தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். குழுப் போட்டிகளாயின் முதல் 2 இடங்களையும், தனிநபர் போட்டிகளாயின் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக்கள் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், அகில இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த ஊக்க உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வருகிற மார்ச் மாதம் 12ம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடடு ஆணைய தலைமை அலுவலக தொலைபேசி எண். 044-28364322 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.

Tags : medalists ,sports competitions ,
× RELATED கேலோ இந்தியா விளையாட்டு போட்டி...