காரைக்கால், பிப்.7: காரைக்கால் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அன்றைய தினம், பக்தர்கள் எந்தவித கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா தெரிவித்துள்ளார்.காரைக்கால் திருநள்ளாற்றில் உள்ள உலக புகழ்மிக்க தர்பாரண்யேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விழா ஏற்பாடுகளை, மாவட்ட கலெக்டரும் கோயில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா நேரடியாக செய்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை வாஸ்துசாந்தி பூஜை சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டது. விழா குறித்து, மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா கூறியது:தர்பாராண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ளதால், விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், விழா தொடர்பாக, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன், டிஜிபி சுந்தரி நந்தா, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பலர், விழா ஏற்பாடுகளை நேரில் வந்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி சென்றுள்ளனர்.