கரூர், ஜன.31:கரூர் ராஜாஜி சாலை வழியாக போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி செல்லும் மணல் மாட்டு வண்டிகளை கட்டுப்படுத்திட வேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர் பகுதியில் இருந்து மார்க்கெட் வழியாக ஐந்து ரோடு செல்லும் சாலை ராஜாஜி சாலையாகும். இந்த சாலையின் வழியாக கரூரில் இருந்து ஐந்து ரோடு, புலியூர், பசுபதிபாளையம், நெரூர், வாங்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. மேலும், காலை 8 மணி முதல் 10 மணி வரை அதிகளவு வாகன போக்குவரத்து இந்த சாலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை நேரங்களில் கரூரில் இருந்து மேலப்பாளையம் பகுதிக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் சென்று வருகிறது. மணல் ஏற்றியும், ஏற்றிச் செல்லவும் சென்று வரும் இந்த மாட்டு வண்டிகள் பயணம் காரணமாக இந்த சாலையில் காலை நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.