பொள்ளாச்சி, ஜன. 9: பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது பல்வேறு மாவட்டங்களிலிருந்தும். கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளிலிருந்தும் விற்பனைக்காக மாடுகள் கொண்டு வரப்படுகிறது. சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் எதிரொலியாக, பொள்ளாச்சி சந்தைக்கு வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டுவந்து விற்பனை செய்ய திடீரென தடைசெய்யப்பட்டது. கோமாரி நோய் அச்சம் காரணத்தால் கடந்த மாதம் 31ம் தேதி வரை நகராட்சி இடத்தில் செயல்பட்ட மாட்டு சந்தை மூடப்பட்டது. பின், இந்த மாதத்தில் 1ம் தேதி முதல், மாடு விற்பனை மீண்டும் துவங்கியது. இருப்பினும், அருகே உள்ள திப்பம்பட்டி கிராமத்தில் போட்டி சந்தை உருவானதால், நகராட்சி சந்தைக்கு மாடுகள் வரத்து மிகவும் குறைவானது. மேலும், அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் வருகை குறைவால் விற்பனை மந்தமானது. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பால், பொள்ளாச்சியில் நேற்று நடந்த சந்தை நாளில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் வரத்து நின்றுபோனது.