சிவகங்கை, ஜன.9: மகளிர் விடுதிகளை ஜன.31க்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பதிவுச்சான்று பெறாமல் இயங்கி வரும் மகளிர் விடுதிகள் சமூகநலத்துறையின் கீழ் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள்(நெறிமுறைப்படுத்தும்) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015ன் கீழ் பதிவு செய்வது கட்டாயமாகும். உரிய பதிவுச்சான்று பெற்ற மகளிர் விடுதிகள் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். பதிவுச்சான்று பெறாமல் இயங்கி வரும் மகளிர் விடுதிகள் இம்மாத இறுதிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.